Tuesday, 23 March 2021

                                         அக்கினிக்குஞ்சு அய்யாசாமி
பாரதியினுடைய பெருமையை மீண்டும் நிலைநாட்டுகின்ற வகையிலே நமது அன்பிற்குரிய இயக்குநர் ஞானராஜசேகரன் ‘பாரதி படத்தினை வெற்றிகரமாக எடுத்து மக்கள்மத்தியிலே பாரதியை மீண்டும் நினைவுபடுத்தினார்.
  பாரதி எனது உணர்வுகளைத் தட்டிப்பறித்தது ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற அந்தக் கவிதையிலேதான். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா அந்தக்கவிதைக்குச் சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார். அதில் ‘அக்கினி என்பது ஓர் அழிக்கும் சக்தி அந்தக் கோணத்தில் அதை விளக்கினார். இன்னொன்று ‘அக்கினி என்பது ஓர் ஆக்க சக்தி அந்தக் கோணத்திலும் அதைப்பார்த்தார்.
  பாரதி வாழ்ந்த அந்தக்காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு இந்த நாட்டிலே அடிமைத்தனத்தைச் சுட்டெரிக்கின்ற ஓர் அக்னிக்குஞ்சு தேவைப்பட்டது. அந்த அக்கினிக்குஞ்சை இந்திய நாட்டினுடைய அடிமைத்தனம் என்கின்ற அந்தப்பொந்தி னிலே பாரதி இட்டார். அந்த அக்கினிக்குஞ்சு தகித்து  அடிமைவிலங்குகளை யெல்லாம் நொறுக்கி வெந்து தணிந்தது காடு. அந்தவகையில் சுதந்திரம் பெற்றது நாடு. இந்தக்கோணத்தில் நான்மெய்சிலிர்த்தேன்.
  இத்தகைய அக்கினிக்குஞ்சுகள் எங்கெங்கே இருக்கின்றன்வோ அவைகளை எல்லாம் கண்டுபிடித்துத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இணைத்தோம், நமது கூட்டணி ஏற்கனவே பெயரளவுக்கு இருக்கின்ற மற்ற சங்கங்களைப்போல் இருந்துவிடக் கூடாதுஎன்ற காரணத்தாLLல்! ஆசிரியர்களடைய பணிநியமனம், அவர்களுடைய சம்பளம், பஞ்சப்படி, மாறுதல் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே சுற்றிச் சுழன்று நின்றுவிடாமல் இந்த நாட்டு மக்களுடைய வாழ்க்கையோடும்  நாட்டினுடைய சுதந்திரத்தோடும், இறையாண்மையோடும் தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொள்கின்ற உணர்வுமிக்க ஆசிரியர்களை உருவாக்கிட இதுதேவை என்று கருதினோம்.
  இளையதலைமுறையின் தலைவராக நண்பர் டி.ஏ.அய்யாசாமி கூட்டங்களுக்கு வருவார்.அவர் பேசும்போது மணிக்கணக்கிலெல்லாம் பேசமாட்டார். அனேகமாக ஒரு 10நிமிடம் அல்லது 15நிமிடம்தான் பேசுவார்.ஆனால் அந்த நேரத்திற்குள் உணர்ச்சிப் பிரளயமாக ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளைப்பற்றியும், அதிலிருந்து மீள்வதற்கு நாம் ஒன்றுபட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கி, அதற்கு அளப்பரிய தியாகங்களுக்கு ஆயத்தமாக வேண்டுமென்ற அறைகூவலையும் விடுப்பார். அப்படிப்பட்ட அக்கினிக் குஞ்சாகத்தான் அவர் விளங்கினார். இப்படி மேடையிலே அனல்தெறிக்கப் பேசுகின்ற அய்யாசாமி எப்படிப்பட்டவர்? அவர் மேடையில் மட்டும் வீரமுழக்கமிடுபவரா?


  தன்னுடைய சொந்தவாழ்க்கையிலே, நண்பர்கள் குழாமிலே, ஆசிரியச் சமுதாயத் திலே அப்பேர்ப்பட்ட புதுமையான கருத்துக்களை, புரட்சிக்கருத்துக் நாற்று நடுவதுபோல் நட்டுக்கொண்டிருந்தவர்.அதைவளர்த்துப் பயிர்செய்து கொண்டிருந்தவர். அய்யாசாமி இங்கே நிகழ்த்தியதுதான் புதுமை. விதவைத் திருமணத்தை இங்கே நடத்தி வைத்தார். கோவை மாவட்டத்தில் பல்வேறு ஆசிரியர் குடும்பங்களிலே சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்தார். மூட நம்பிக்கைகளை எல்லாம் விட்டொழித்து அறிவார்ந்த ஒரு திருமணமுறைக்கு நாம் வரவேண்டுமென்று ஆசிரியச் சமுதாயத்தில் அறிமுகப்படுத்தியவர் அய்யாசாமி.
  அவருடைய துணைவியார் சரஸ்வதி உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நானும்.மாநிலப்பொருளாளர் நாகப்பனும் வந்தோம். அய்யாசாமி போன்ற, தன்னையே இயக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்ப நலன்களில் இந்த இயக்கத்திற்குப் பெரிதும் அக்கறை இருக்கிறது. அரசுப் பொதுமருத்துவமனையில் அவர்துணைவியார் பாயில்தான் படுத்திருந்தார். அய்யாசாமி சொன்னார், நீங்கள் செய்கிற உதவியால், வேறுவிஷயங்களால் என்னுடைய மனைவிக்கு ஒருவசதியான இடத்தைக் கொடுத்துவிட முடியும். ஆனால், என்மனைவியைப் போன்று இங்கே இருக்கிறார்களே நூற்றுக் கணக்கானவர்கள்; இவர்களுக்கெல்லாம் யார் செய்வார்கள்? கிடைக்கிற வசதியை வைத்துக்கொண்டு தான்மட்டும் உயர்ந்துவிட வேண்டும் என்ற உணர்வே இல்லாத உன்னதமான தன்மையை அந்தத் தோழனிடத்தில் கண்டு வியந்தோம்.
 அந்தஇனிய தோழன் ‘பாரதி திரைப்படம் வெளிவந்தபோது அதைக் கோவை மாவட்டம் முழுவதும் தனது தோள்களிலே சுமந்துசென்றார். என்நெஞ்சைக் கவர்ந்த இலட்சியங்களைத் தாங்கி வந்திருக்கிற இந்தப்படமும், பாரதியின் கருத்துக்களும் மக்களைக் கவ்விப் பிடிக்க வேண்டும்; அவர்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தவேண்டும், என்ற உந்துதலால் பள்ளி பள்ளியாகச் சென்று மாணவர்களை, ஆசிரியர்களை, பெற்றோர்களை, பொதுமக்களை அழைத்துவந்து கோவையில் 100 நாட்களுக்குமேல் அந்தப்படத்தை ஓடச்செய்தார்.
  அய்யாசாமி ஆசிரியர் பணியிலிருந்தும், இயக்கப்பணியிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு இன்று பாராட்டுவிழா. இது அவரைபோன்ற நூற்றுக்கணக்கான அய்யாசாமிகள் ஆசிரியர் சங்கத்தில் மட்டுமல்ல; இந்தச் சமுதாயத்திலும் உருவாகி யாகவேண்டும். அப்போதுதான் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் ஒருமுடிவு ஏற்படுத்தி முற்போக்கான கருத்துக்கள் இந்தச் சமுதாயத்தில் நின்றுநிலவ நாம்வழி காணமுடியும். அதற்காகத்தான்.
  நம்நாட்டில் பழம்பெரும் புராணங்களும், இதிகாசங்களும் இருக்கின்றன. இவற்றை நாம் மறுவாசிப்புக்குள்ளாக்கிப் புதியவழியில் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அவற்றை மக்கள் மனங்களுக்குக் கொண்டுசென்றாக வேண்டும். மகாபாரதமும், இராமாயணமும் நுழையாத வீடுகள் இந்த நாட்டில் இல்லை.அவை தொலைக்கட்சித் தொடர்களாக வந்தபோது இந்தியா முழுவதும் ஈர்க்கப்பட்டிருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அதன் கருத்துக்கள் இந்த மண்ணிலே நின்றுநிலவி வருகின்றன.

  மகாபாரதம் என்ன கூறுகிறது? ‘சூதாட்டத்தில் தோற்ற நாட்டை 12 ஆண்டுகள் வனவாசம், 1 ஆண்டு அஞ்ஞாதவாசம் முடிந்தபிறகு மீண்டும் பாண்டவர்களுக்குக் கௌரவர்கள் தந்துவிட வேண்டும் அவற்றை முடித்தபிறகு பாண்டவர்கள் வருகிறார்கள். துரியோதனாதிகளோ நாட்டைக் கொடுக்க மறுக்கிறார்கள். கடவுள் அவதாரமான கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூதுபோகிறார். மினிமம் டிமாண்ட். ‘5கிராமங்கள் கொடு. 5வீடாவது கொடு என்கிறார். ஆனால், கௌரவர்களோ ‘முடியவே முடியாது என்கிறார்கள். தூதுதோல்வி அடைகிறது. குருச்சேத்திரப்போர் மூள்கிறது. பாண்டவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.கடவுளே தூதுபோனாலும் களத்தில் இறங்காமல் காரியங்கள் வெற்றி பெற்றதில்லை.இப்படித்தானே மகாபாரதத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்?
 இராமாயணத்தின் கதை என்ன? பாண்டவர்களுக்காவது இராஜ்ஜியம். கடவுள் அவதாரமான இராமனுக்கு? தன்வாழ்வின் வசந்தமாகிய சீதையைத் தூக்கிக்கொண்டு போகிறான் இராவணன். அந்தச் சீதையைக்கூட எப்படி மீட்க முடிந்தது? இராமன் ஓர் அவதாரபுருஷன். கடவுளே அவதாரமாக வந்தாலும், சொல்லின்செல்வன்அனுமனைத் தூதாக அனுப்பினாலும் ஒன்றும் நடக்கவில்லை. இராமஇராவண யுத்தத்தில் இராவணன் அழிக்கப்பட்டுத்தான் சீதை மீட்கப்பட்டாள். இங்கே இருக்கிற அநீதிகளை எல்லாம் வென்றெடுக்க வேண்டுமென்றால் நாம் போராடுவதைத்தவிர வேறுவழி இல்லை. போராட்டத்தில் அனைத்துப்பகுதி மக்களையும் இணைப்பதைத்தவிர வேறுவழி இல்லை. இப்படித்தான் இராமாயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  எப்படி மாவோ ‘மலைகளை அகற்றிய மூடக்கிழவனிலிருந்து கற்றுக்கொண்டாரோ அதைப்போல நமதுநாட்டின் இதிகாசங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி அவற்றிலி ருந்து புதிய உண்மைகளை, புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு அவற்றை  நாம்  நூற்றுக்கணக்கான அய்யாசாமிகளாக மாறி இந்த நாட்டின் ஆசிரியர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும். அநீதிகளைக்கண்டு கொதித்தெழுகின்ற ஆவேசத்தின் வார்ப்புகளாக, அக்கினிக்குஞ்சு ளாக அவர்களை மாற்றவேண்டும்.அதற்கு ஆயிரமாயிரம் அய்யாசமிகள் இந்த மண்ணில் உருவாக வேண்டும். அதற்குத்தான் இந்தப் பாராட்டுவிழா.அய்யாசமியைப் பாராட்டி “ உங்கள் வேலை முடிந்துவிட்டது: உங்களுக்கு நன்றி! போய்வாருங்கள், என்று சொல்வதற்கல்ல. அய்யாசமிக்கு இன்னும் நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. அவர் தன்வாழ்நாள் முழுவதும் இந்த இலட்சியத்தை உயர்த்திப்பிடித்து இதற்காகப் பாடுபடுகின்ற இளையதலைமுறையைத் தலைமைக்கு உயர்த்த வேண்டும்.
  இந்தநாட்டில் தலைவர்களுடைய பஞ்சத்தைப்பற்றி இயக்குநர் ஞானராஜசேகரன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் அரசியலில் மட்டுமல்ல: சங்கங்களிலும்கூடத் தலைவர்கள் மத்தியில் ஒருபஞ்சம் இருக்கிறது. அதாவது தலைமைக் குணத்திற்குப் பஞ்சம் இருக்கிறது. தலைவர்கள் இருக்கிறார்கள்: ஆனால், தலைமைப் பண்புதான் இல்லை.
  மாஸ்டர் இராமுண்ணி எந்த இலட்சியங்களுக்காக இந்தச்சங்கத்தை உருவாக்கி னாரோ அந்தஇலட்சியங்களை மீண்டும் ஆசிரியர் சமுதாயத்திற்கு நினைவுபடுத்தி அவற்றை முன்னெடுத்துச் செல்கின்ற தளபதிகளாக இந்தத் தலைவர்கள் விளங்க வேண்டுமென்ற தேவை இங்கே இருக்கிறது.
  1037 டிசம்பர் 29,30ல் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலத்தில்  ஆசிரியர் சங்கத்தின் 4ஆம் மாநாடு நடைபெற்றது. ‘சௌத் இண்டியன் டீச்சர்ஸ் யூனியன் கேரளப்பகுதித் தலைவராக சதேசன் என்பவர் இருந்தார்.இந்த மாநாட்டில் ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடலாமா?என்ற பிரசனை விவாத்தத்திற்கு வந்தது. ஆனால்,தலைவர் சதேசனோ ‘சம்பளம், டி.ஏ, பணிப்பாதுகாப்பு, டிரான்ஸ்பர் ஆகியவற்றுக்குத்தான் நமது மாநாட்டில் தீர்மானம் போட வேண்டும். சுதந்திரத்தைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது. அதெல்லாம் அரசியல் பிரச்சனை என்று விவாதத்தை அனுமதிக்க மறுத்தார்.
  ஆனால், 1930களின் பிற்பகுதியில் இந்தியநாடு முழுவதிலும் சுதந்திரக்கனல் அனைவரது நெஞ்சங்களையும் கௌவிப்பிடித்துக்கொண்டிருந்தபோது மக்களின் ஒரு பகுதியினரான ஆசிரியர்களை மட்டும் அது விட்டுவைக்காது அல்லவா? என்வே கேரளமாநிலத்திலிருந்த ஆசிரியர்கள் ‘ இந்தியநாட்டின் சுதந்திரத்தில் நமது பங்கேற்பு இருந்தாக வேண்டும். நம்நாடு சுதந்திரம் அடைகிறபோதுதான் கல்வியிலேயும் சுதந்திரமான கலைத்திட்டங்களையும், கல்வித்திட்டங்களையும் கொண்டுவர முடியும். அடிமைஇந்தியாவில் அடிமைக்கல்வி முறையைத்தான் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் தேவை. ஆசிரியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று விவாதம் செய்தனர்.ஆனால், சதேசன் அதை அனுமதிக்க மறுத்து, மாநாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளி நடப்புச்செய்தார்.
  அன்றுதான் கோழிக்கோடு பகுதியின் ஆசிரியர் சங்கத்தலைவராகவும், கேரளாவின் ஆசிரியர் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய மாஸ்டர்.வி.இராமுண்ணி அந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஆசிரியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்ற தீர்மானம் வருகிறது: ஒருமனதாக நிறைவேறுகிறது. இராமுண்ணி சுதந்திரப் போராளியாக மாறுகிறார்.
   அந்தக்காலகட்டத்தில், மெட்ராஸ் ப்ராவின்ஸ் என்ற சென்னை மாகாணத்தின் இன்னொரு பகுதியான தமிழ்நாட்டில் ஆசிரியர் சங்கமே இல்லை.ஆசிரியர்கள் மத்தியில் எந்தவித விழிப்புணர்வும் இல்லை. எனவே, கேரளாவில் இருந்து ஆசிரியச் சகோதரர்கள் சிலர் தமிழ்நாட்டிற்குச் சென்று ஆசிரியர்கள் மத்தியில் வேலைசெய்து ஒருபுரட்சிகரமான ஆசிரியர் சங்கத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவுசெய்தார்கள். அந்தமுடிவு மாஸ்டர் இராமுண்ணியிடம் ஒப்படைக்கப் படுகிறது.
  1947ஜனவரி7ல் 19பேரோடு கோழிகோட்டிலிருந்து மிதிவண்டியிலேயே சென்னைக்கு ஜனவரி29ல்வந்தார். மார்ச்1,2ல் சென்னை மாநாட்டில் அவர் உருவாக்கியதுதான் ‘சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் என்ற ‘மெட்ராஸ் ப்ராவின்ஸியல் பிரைமரி டீச்சர்ஸ் ஃபெடரேஷன் இதை அவர் உருவாக்கியது எதற்காக? டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்கிற புரோக்கர்களை உருவாக்குவதற்கா? அல்லது சம்பளம். பஞ்சப்படி வாங்கித்தருகிற சிலநபர்களைத் தயாரிப்பதற்கா? அல்ல. “ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும், மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் மிளிர்ந்த மாஸ்டர் இராமுண்ணி இந்த உணர்வுகளை ஆசிரியர் சமுதாயம் தனக்குள் வரித்துக்கொள்ள அரும்பாடுபட்டார். அதேநேரத்தில் அவர்கள் பொருளாதார நலன்களுக்காகவும் இடைவிடாது பாடுபட்டார்.
  அந்த இலட்சியத்தை ஏந்திப்பிடித்துவரும் இயக்கம்தான் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இந்த இலட்சியத்தை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான அய்யாசாமிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை.தமிழ்நாடு முழுவதிலும் தேவை. அய்யாசாமியைப் பாராட்டி முடிப்பதோடு நம்கடைமை முடிந்து விடுவதில்லை. அவர் உயர்த்திப் பிடித்திருக்கிற இலட்சியத்தை நம்வாழ்க்கையில் பின்பற்றுவதும், ஆசிரியர் கள் மனங்களிலே அந்த இலட்சியங்களை விதைத்துக் கௌவிப்பிடிக்கச் செய்து அவர்களை ஒருபௌதீக சக்தியாக எழவைப்பதும் நம்முடைய கரங்களிலே இருக்கிறது. ஒருபுதிய தலைமுறையை, இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட பணியைச் செய்வதுதான் அய்யாசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாம்செலுத்துகிற உண்மையான பாராட்டாக இருக்கும்.
  இந்தப்பாராட்டுவிழாவில், அய்யாசாமி என்கிற - இனிய ஒரு தலைவர் என்று சொல்வதைவிட - போலித்தனமில்லாத வாழ்க்கையைக் கொண்டிருக்கிற இனிய தோழனுக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இலட்சியப் பயணத்தில் அவர் தன்னை இணைத்துக்கொள்ளப் பெரிதும் உறுதுணையாக் இருக்கும் அவரது துணைவியார் அன்புச்சகோதரி சரஸ்வதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மாநில அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களையும்; பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்!
                                    அய்யாசாமி ஏற்புரை
         நான் சார்ந்துள்ள ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொண்டாமுத்தூர் வட்டாரக்கிளை இவ்வளவு சிறப்பாக ஒருவிழாவினை எடுத்துச் சிறப்பு மலரையும் வெளியிட்டு எனது இயக்கப்பணியையும், சமுதாயப்பணியையும் பெருமைப் படுத்தியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  என்மீது அன்புகொண்டு இவ்விழாவுக்கு வருகைதந்து சிறப்புமலரை வெளியிட்டுத் தனது அடுத்த படமாகப் “பெரியார் படத்தின் அறிவிப்பை எனது பாராட்டுவிழாவில் முதன்முதலாக வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ள இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கும், இலட்சங்களைப் பார்க்காமல், இலட்சியத்திற்காக உழைப்பவர்களைக் கொண்ட எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் செ.நடேசன் அவர்களுக்கும் நன்றி.
  ஆசிரியர் பணியிலிருந்து மட்டுமே நான் விலகியுள்ளேன். தொடர்ந்து சமுதாயப்பணி ஆற்றிவருவேன் .இவ்விழா சிறக்க அல்லும், பகலும் உழைத்த அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.வணக்கம்!
           (நண்பர் டி.ஏ.அய்யாசாமி 19.2.2010 அன்று மறைந்தார்)


No comments:

Post a Comment