Friday, 28 March 2014

Thi.Ka.Si. 90th Birth Day Memorial


                தி.க.சி.
            30.03.1925 – 25.03.2014   
            21.சுடலைமாடன் தெரு, திரு நெல்வேலி
     ( 25.03.2014 அன்று மறைந்த இலக்கிய அறிஞர் தி.க.சி. அவர்களின் நினைவாக)
 ‘ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ 25.03. 2001 இதழில் அவரது 77வது பிறந்த நாள்   வாழ்த்தாக வெளியிட்ட செய்தி

  விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்ற நூலுக்காக இவ்வாண்டின் சாகித்ய அகாதெமியின் விருதினைப் பெற்றுள்ளார் ‘தி.க.சி. என இலக்கிய ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்படும் ‘இலக்கிய அறிஞர் தி.க.சிவசங்கரன்
 ‘இன்றும் நான் ஓர் இலக்கியமாணவன் தான்என்று அடக்கத்துடன் சொல்லிக்கொள்ளும் தி.க.சி.58 ஆண்டுகள் இலக்கிய அனுபவத்துக்குச் சொந்தக்காரர்.உடல்நலக்குறைவு காரணமாக புதுதில்லி சென்று இவ்விருதினைப்பெறமுடியாத காரணத்தால் சாகித்ய அகாதெமியின் சென்னைக் கிளை இவ்விருதினைச்சென்னையில் அவருக்கு வ்ழங்கிப் பெருமைப்படுத்தியுள் ளது. திருநெல்வேலியிலிருந்து இதற்காகச் சென்னை வந்த தி.க.சி.க்கு இலக்கிய அமைப்புக்களும், நண்பர்கள் குழாமும் பாராட்டுக்கூட்டங்களை நட்த்தி மகிழ்ந்துள்ளன.

 இலக்கியம்மூலம் சமூகத்தைச் செப்பனிடமுடியும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் தி.க.சி. 1944ல் முப்பத்து ஏழரை ரூபாய் ஊதியத்தில் தாம்கோஸ் வங்கி ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கிய தி.க.சி.1964ல் சோவியத் செய்தித்துறையில் சேர்ந்தார். 26 ஆண்டுகள் அங்கு பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார்.

 இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலர் உருவாக வழியமைத்த ‘தாமரை என்ற இலக்கிய இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர் இவர்.

 புகழ்பெற்ற இலக்கிய அறிஞர் இலங்கைப் பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி தி.க.சி.யை –‘இலக்கியக்களப்பணியாளர் என்று பாராட்டுகிறார். தி.க.சி.யும் தான் அவ்வாறே அறியப்பட விரும்புகிறார்.
 
  6 மொழிபெயர்ப்பு நூல்கள்,4 திறனாய்வு நூல்களை எழுதியிருக்கும் தி.க.சி.க்கு 77 வயதிலும் எழுத்தார்வம் குறையவில்லை.

     30.03. 2001ல் 77வது பிறந்த நாள் காணும் தி.க.சி.யின் இலக்கியப்பயணம் தொடர
        ஆரம்ப்ப்ப்ள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

மாநில அமைப்பின் பொதுச்செயலாளர் செ.நடேசன் சார்பில் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் செ.போத்திலிங்கம், மவட்டத்துணைத்தலைவர் முருகேசன்,இடை நிலை ஆசிரியர் சங்கத்தின் பாபு, தமிழாசிரியர் வை.இராமசாமி ஆகியோர் தி.க.சி அவர்களின் இல்லத்திற்குச் சென்று பொன்னாடை அணிவித்து 25.03.2001 நாளிட்டஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதழை அவரிடம் அளித்தனர். மாவட்டச்செயலாளர் செ.போத்திலிங்கத்திற்கு தி.க.சி.எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

           தி.க.சி.யின் கடிதம்
தி.க சிவசங்கரன்                                21.ஈ.சுடலைமாடன் தெரு
(தொலைபேசி:333456)                               நெல்லை -627006
                                              6.4.2001 வெள்ளிக்கிழமை

 வணக்கம். ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலாளரான தாங்களும், பிற ஆசிரியப்பெருமக்களும் அண்மையில் ஏப்ரல் 2 மாலையில் எனதுஇல்லம் தேடிவந்து மிக்க தோழமையுடன் எனக்குச் சிறப்புச்செய்தீர்கள்: இது நமது அன்னைத்தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், உலகிலுள்ள 8 கோடி மக்களைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் செய்த சிறப்பாகும்-கௌரவமாகும்-என்றே நான் கருதுகிறேன். எனவே, தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 25.3.2001 ஆம் தேதியிட்ட தங்கள் இதழின் முதல்பக்கத்தில் என்னைப்பற்றிக்கூறியுள்இனியப் பாராட்டுமொழிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
    
உழைக்கும் மக்களின் நலனிலும், தொழிற்சங்க இயக்கத்திலும், மனிதகுல விடுதலையிலும், மேம்பாட்டிலும் அக்கறைகொண்ட ஓர் இலக்கியப்படைப்பாளி, போராளி என்னும் முறையில் ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உன்னதக்குறிக்கோள்கள் நிறைவேற எனது எழுதுகோள் இயங்கும் என்பதை எனது 77 ஆவது பிறந்த நாள் (30.3.2001) செய்தியாக மிக்க அன்புடன் வழங்குகிறேன். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு “ எனும் மகாகவி பாரதியின் வாசகம் எப்போதும் நம் இதயத்தில் இருக்கவேண்டும்.

சுதந்திரம், ஜனநாயகம், சமதர்ம்ம், (உலக)சமாதானம் எனும் விழுமிய குறிக்கோள்களுக்காக, இந்தியா எங்கிலும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் போராடிவரும் காலகட்டம் இது. சோதனை மிகுந்த இந்தக்காலகட்டத்தில் மக்களிடையே அறிவொளியைப்பரப்பும் ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது தமது நலஉரிமைகளுக்காகப் போராடும் இதர மக்கள்பகுதியோடு இணைந்துநின்று உறுதியாகப்போராடுமாக! சமூகநீதிக்கும், சமூகமுன்னேற்றத்திற்குமான போராட்டங்களில் ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன் நிற்கும் என்று நம்புகின்றேன். தங்கள் இயக்கம் மென்மேலும் வளரவும், வலுப்பெறவும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

-என்றும் அன்புடன்
 தி.க.சி.