Friday, 4 October 2013

                      அறிவியல் அரசியல் அறிஞர்
                     பேராசிரியர் மைரன் வெய்னர்
   இந்தியாவின் நண்பரும், அரசியல் அறிவியல் அறிஞருமான பேராசிரியர் மைரன் வெய்னர் ‘இந்திய அரசியல் பற்றிய தனது ஆய்வுகளைத் தொடங்கி 22 புத்தகங்களை எழுதியுள்ளார். ஜனநாயகக்கோட்பாட்டை வரித்துக்கொண்ட இந்திய நாட்டின்மீது ஆர்வம் கொண்ட அவர் 1950களில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்திய அரசியலைத் தனது ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டார். அரசியல் கட்சிகள் எவ்வாறு உருவாகின்றன? எத்தகைய கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன? தொலைதூரக் கிராமங்களிலும்கூட அவை எவ்வாறு வேர்கொள்கின்றன? என ஆராய்ந்தார்

  இந்த ஆண்டுகளில் வெய்னர் தனது ஆய்வுத்தளங்களை மேலும் விரிவாக்கிக்கொண்டார். மத அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகள் பற்றியும்,மக்களைத் தங்கள் சொந்த வீடுகளிலி ருந்தும், பூர்வீகக்கிராமங்களிலிருந்தும் எத்தகைய வன்முறைகள் வெளியேற்றி அகதிகளாக்குகின்றன? என்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார். தனது ஆய்வுகளுக்குப் புத்தகங்களை மட்டுமே நம்பியிராமல் கிராமங்களுக்கும் சென்று சாதாரண மக்களை நேரில் சந்தித்து அடிப்படையான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் அளிக்கும் பதில்களிலிருந்து விபரங்களைச் சேகரித்துக் கொண்டார்.
                                                                                   சாதனை மகுடம்
  இத்தகைய நுணுக்கங்களைக் கையாண்டு ஆய்வுசெய்து பேரா .மைரன்வெய்னர் எழுதிய “இந்தியாவில் குழந்தையும், அரசும்(   TheChild and the State inIndia                ) என்ற நூல்இந்தியாவில் மட்டுமன்றி வளரும் நாடுகளிலும்கூடக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விவாதங்களின் அடித்தளத்தையே மாற்றியது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரபேராசிரியரான ஜக்தீஷ் பக்வதி இந்த நூலைப்பற்றிக் குறிப்பிடும்போது “இது பேரா.மைனர் வெய்னரின் சாதனை களின் மகுடம் என்கிறார்.

  ‘ஒப்புமைநோக்கில் குழந்தைத் தொழிலாளரும், கல்விக்கொள்கைகளும் என்ற துணைத் தலைப்பு கொண்ட பேரா.மைனர் வெய்னரின் நூல் வெளிவருவதற்குமுன்னர் ‘இந்தியா ஓர் ஏழ்மைநாடு. எனவே, குழந்தை உழைப்பைத் தடுக்கவும், அனைவருக்கும் கல்வி கொடுக்கவும் அதனால் முடியாது. ஏழைப்பெற்றொர்கள் தங்கள் குடும்ப வரவுசெலவை ஈடுகட்டக்கூடத் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். பெற்றோர்களின் வருமானம் உயராத வரையில் இதில் மாற்றம்செய்வது இயலாது என்பதாகவே பல அரசியல்வாதிகளின் சிந்தனை ஓட்டம் இருந்தது.
                                   வெய்னரின் மறுப்பு
  ஆனால், பேரா.மைனர் வெய்னர் வரலாற்றுப்பூர்வமான வாதங்களை முன்வைத்து இந்தச் சிந்தனைஓட்டங்களை மறுத்தார். ‘ஏழ்மை நிறைந்த 19ஆம் நூற்றாண்டின் சமூகங்களில்- ஸ்காட்லாந்தில், கல்வியைப் பரவலாக்கும் சீர்திருத்தங்கள் மதநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பரவலாகித் தொடர்ந்தன. அதிகரித்த வருமானம் அதன்பின்னரே தொடர்ந்தது என்றார் வெய்னர். ‘ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்தியாவைவிட மிகஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் கல்வியறிவின்மையின் விகிதாச்சாரத்தைக் குறைப்பதிலும், கல்வியைப் பரவலாக்கிஅடையவைப்பதிலும் இந்தியாவைவிட மிகச்சிறந்த சாதனைகளைச் செய்துள்ளன‘ என்ற வெய்னரின் ஒப்பீட்டுப் பட்டியல்கள் அவரது கருத்துக்களை மேலும் எளிதாக ஏற்க வைக்கின்றன. இந்தப்புத்தகத்தில் இந்தியாவோடு அடிக்கடி ஒப்பீடு செய்யப்படும் சீனா கல்வியில் இந்தியாவைவிட அதிகம் சாதித்துள்ளது ஒப்பீட்டு ஆய்வுமுறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
                                                                   எல்லாம் தெரிந்தவர்கள்
  வெய்னர் தனது ஆய்வுகளுக்குப் பல்வேறு தகவல்களைச் சேகரிக்கும்போதே அவற்றை ஆய்வுசெய்து கண்டறிந்த முக்கியமான தகவல்களைச் சம்பந்தப்பட்ட அரசுஅலுவலர்களின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளார். இந்த அலுவலர்களோ, ‘நிலைமைகள் எல்லாம் தங்களுக்கு முழுவதும் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
  கொலம்பியா பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜக்தீஷ் பக்வதி கூறும் ஒரு தகவல் மிகவும் சுவாரசியமானது.இதை வெய்னரே அவரிடம் கூறியதாக பகவதி தெரிவித்தார்.
  புதுடில்லியில் கல்வித்துறைச் செயலாளரை ஒருமுறை வெய்னர் சந்தித்தார். “இந்தியாவில் கட்டாயக்கல்வி நடைமுறையில்  உள்ளதா? இல்லையா? என்பதுபற்றி அவர்கள் விவாதம் நடைபெற்றது. வெய்னர் “இந்தியாவில் கட்டாயக்கல்வி நடைமுறையில் இல்லை என்று கூறினார். ஆனால், கல்விதுறைச் செயலாளரோ ‘கட்டாயக்கல்வி அளிக்க அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. என்வே, இந்தியாவில் கட்டாயக்கல்வி நடைமுறையில் உள்ளது என்று சாதித்தார்.
  ஆனால், வெய்னர் கல்வித்துறைச் செயலாளரிடம் “அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப் பட்டதை வைத்துக்கொண்டு பல்வேறு மாநிலங்களும் கட்டாயக்கல்விச் சட்டத்தைத் தங்கள் சட்டமன்றங்களில் நிறைவேற்றிவிட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். என்று தெரிவித்தார். அரசியல் சாசனக்கடைமைகளை மாநிலஅரசுகள் நிறைவேற்றச் சட்டங்கள் இயற்றுமாறும், தேவைப்படும் உதவிகளை இந்தியக்குடிமக்களுக்கு அளித்திடுமாறும் வலியுறுத்தி ஒருகடிதத்தை அளித்தார்.
  வெய்னர் தனது கடிதத்தில், “குழந்தை உழைப்பை முடிவுக்குக்கொண்டுவரப் பலமுறை முயன்று சோதிக்கப்பட்ட ஒருதீர்வு உள்ளது. அதுதான் ஆரம்பக்கல்வியைக் கட்டாயமாக்குவது. வெறும் இலவசமாகத் தருவதல்ல: கட்டாயமாக்கி இலவசமாகத் தருவதே என்று வலியுறுத்தினார். “குழந்தை உழைப்புச்சட்டத்தின் அமலாக்கம் தேவையான ஒன்றுதானேதவிர, அதுமட்டுமே குழந்தை உழைப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போதுமானதல்ல என்று அவர் பல்வேறு நாடுகளின் வரலாற்றுப் பூர்வமான ஒப்பீட்டு விபரங்களைச் சுட்டிக்காட்டினார். “குழந்தை உழைப்பைக் களைந்திடும் திறவுகோல் கட்டாயக்கல்வியே என்றார். “பலநாடுகளில் கட்டாயக்கல்வி பொருளாதார வளர்ச்சியின் முன்னோட்டமாக விளங்கியிருக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 1993ல் தமிழகமுதல்வர் செல்வி.ஜெயலலிதாவிடம் தனது கடிதத்தை அளித்து கட்டாய ஆரம்பக்கல்விச் சட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். அந்தக் கடிதத்தை ‘ஃப்ரண்ட் லைன் ஆங்கிலஏடு தனது 12.3.1993 இதழில் வெளியிட்டது.
  வெய்னரின் கடிதத்தைத் தொடர்ந்து இந்திய நாட்டிலேயே முதல்மாநிலமாக தமிழ்நாடுஅரசு 1994ல் கட்டாய அரம்பக்கல்விச் சட்டத்தை நிரைவேற்றியது.
                                                                      அரசின் செயலற்றதன்மை
  ‘உலகத்திலேயே மிகஅதிக எண்ணிக்கையில் கல்வியறிவற்றவர்களைக் கொண்டுள்ளநாடு இந்தியாதான் என்று குறிப்பிட்ட வெய்னர், ‘ஒருங்கிணைந்த கட்டாயக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தவறியதுதான் இதற்குக் காரணம் என்று விளக்கினார். குழந்தை உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், ஆட்சிஅதிகாரத்தில் இருப்பவர்களும் நம்பிக் கொண்டிருப்பதைப்போல ‘நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கும், கல்விப்பரவலுக்கும் பெருமளவுக்குத் தொடர்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய வெய்னர், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் இருப்பதற்குக் காரணம் அரசின் செயலற்றதன்மையும், அதன் “எதையுமே செய்யாத அரசியலுமே காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
                                                                        மூன்று அம்சங்கள்
  1994ல் இந்தியாவில் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய சாதகமான பார்வை உருவாகியிருப்ப தாக வெய்னர் அறிவித்தார். தனது நம்பிக்கை மூன்று அம்சங்களில் துளிர்விடுகிறது என்று ‘ஃப்ரண்ட் லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். வெளியீட்டுச் சாதனங்கள் (பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி) அரசுசாரா நிறுவனங்கள், உலக அமைப்புக்கள் – ஆகிய மூன்றும் குழந்தை உழைப்புபற்றியும், கட்டாயக்கல்வி பற்றியுமான கொள்கைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்திவருகின்றன என வெய்னர் நம்பினார். எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்விக்குப் பதிலாக ஆரம்பக்கல்விக்கு மிக அதிகஅளவில் நிதிஆதாரங்களை ஒதுக்கிட மத்தியஅரசு செய்திருந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கும் நல்ல மாற்றம் என்றும் வர்ணித்தார்.
                                                                   தொடக்கக்கல்வி இயக்ககம்
  1994ல் தமிழகசட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப் பட்டிருந்த கட்டாயக்கல்வி ஆரம்பக்கல்விச்சட்டம் 1999-2000 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது வெய்னரின் கனவு நனவாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடக்கக்கல்விக்குத்தனிஇயக்ககம்என்ற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தது. குழந்தை உழைப்பை ஒழித்துக் கல்லாமையை இல்லாமை ஆக்கும் திசைவழியில் எடுத்துவைக்கப்பட்ட முதல்நடவடிக்கை என வரவேற்கப்பட்டது.
  ஆனால், அதேநேரத்தில் 1964ல் இருந்து நடைமுறையில் இருந்த 1:20ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:40என உயர்த்திக் கிராமப்புறப் பள்ளிகளில் 96மாணவர்வருகைக்கு 5 ஆசிரியர்கள் என இருந்த நிலையை 2ஆசிரியர் மட்டுமே எனக்குறைத்தது.பலபள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் ஆயின. ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைத்து மாணவர்களின் கல்வித்தரத்தைச் சீர்குலைப்பது கட்டாயக்கல்விச் சட்டத்தின் நோக்கங்களை அடைவதில் தடைக்கற்களாகும் என்பதை அரசும், கல்வித்துறையும் தெரிந்தே செய்தன.
                                                                          வெய்னர் மறைவு
  வளரும்நாடுகளின்மீது- குறிப்பாக இந்தியா நாட்டின் மீதும், இந்தியக் குழந்தைகளின்மீதும் பெரிதும் அக்கறைகொண்டு தமது வாழ்நாளின் பெரும்பகுதியைக் குழந்தை உழைப்பைக் களைந்திடவும், கட்டாய ஆரம்பக்கல்வியை அரசுகள் நடைமுறைப்படுத்திடவும் ஆய்வுகள் செய்து, தீர்வுகளை அளித்த பேராசிரியர்.மைரன் வெய்னர் தமது 68வது வயதில் 3.6.1999 வியாழன் அன்று அமெரிக்காவில் மோர்டவுன்-ல் உள்ள தமது இல்லத்தில் மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் மறைந்தார். இந்தச்செய்தி உலகம் முழுவதிலும் உள்ள கல்வியாளர்கள் அறிவியல் அறிஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  நியூயார்க் நகரில் 1931ல் பிறந்து, 1951ல் சிடி கல்லூரியில் பட்டம் பெற்று, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1953ல் முதுகலைப்பட்டமும், 1955ல் டாக்டர் பட்டமும் பெற்ற பேரா. மைரன்வெய்னர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகத் தமதுபணியைத் தொடங்கினார். 1961ல் மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசியல் அறிவியல்துறைப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1999ல் ஓய்வுபெறும்வரை 38ஆண்டுகள் இக்கல்லூரியில் பணியாற்றினார்
.
                                 பேராசிரியர் மைரன் வெய்னரின் முக்கிய நூல்கள்

                  The Global Migration Crisis Challenge to States and Human Rights

               Threatened Deoble Threatened border   World Migration and U,S, Policy

         The State and Social transformation in Afghanistan, Iran and Pakistan  ஆகியன அவரது முக்கிய நூல்களில் சிலவாகும்.
  இந்தியநாட்டின் கல்விவளர்ச்சி, குழந்தைத் தொழிலாளர்நலன் ஆகியவற்றில் அக்கறைகொண்டுள்ள அனைத்து ஆசிரியர் இயக்கத்தலைவர்களும், ஒவ்வொரு ஆசிரியரும் தவறாது படிக்கவேண்டிய நூல் ‘இந்தியாவில் குழந்தையும் அரசும்  இந்தியாவின் அந்த உண்மை நண்பரின் கனவை நனவாக்குவோம் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றி.
 

.

No comments:

Post a Comment